இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க. என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைந்திருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.மேலும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி வைட்டு அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மோடி ஒப்புக் கொண்டார் என தெரிவித்திருந்தார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்திய தரப்பில் இருந்து ரஷியாவுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என ரஷ்ய செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாக மீண்டும் வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லியாவிட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய – அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?”என குறிப்பிட்டுள்ளார்.
