முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று (மார்ச் 4 தெற்கு ரயில்வே நிர்வாகம் திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட இந்திப் பெயரை அகற்றி உள்ளது.
திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் தரும் வகையில் “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் தமிழில் எழுதப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். ‘மொழி ஒன்று – வரி வடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான Hindi Imposition செயலில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து திமுகவினர் திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த கல்வெட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்தையை கருப்பு மை கொண்டு அழித்தனர்.
பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட இந்திப் பெயரை அகற்றி உள்ளது.
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்த சு. வெங்கடேசன் எம்பி,“ கர்தவ்ய த்வார்” கழட்டி எறியப்பட்டது.
இந்தித் திணிப்பு அகற்றப்பட்டது.
அகற்றியது இரயில்வே நிர்வாகமல்ல… தமிழ் மக்களின் மொழி உணர்வு.
கட்டாய இந்திக்கு எதிராக இடைவிடாது களமாடுவோம்.
வெல்க தமிழ்” என தெரிவித்துள்ளார்.
