தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனனை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை களம் இறக்கியுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 28) பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை களம் இறங்கி உள்ளது. இதுகுறித்து அம்மன் அர்ஜூனனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “இந்த போட்டி திமுக அதிமுகவிற்கு தான். வெற்றி பெறுவது அதிமுக தான். 2026 மே மாதம் 5ம் தேதி எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார்.” என்றார்.
செந்தில் பாலாஜி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, செந்தில் பாலாஜி எங்கள் வேட்பாளர் விஜயபாஸ்கரை கண்டு பயந்து வந்து விட்டார். அவர் சொந்த தொகுதியை விட்டு வருவதற்கு காரணம் என்ன.. பயம் தான். எங்கள் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவிக்கப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு ஜுரம் காய்ச்சல் வந்துவிட்டது.
இந்தத் தொகுதி சின்ன தொகுதி மக்கள் ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்கள் போல, டப்பா பாக்ஸ் போன்று ஏதாவது கொடுத்து விடலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும் அடித்து விரட்டவும் தெரியும் .
நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இங்கு அவருக்கு இடமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் போட்டியிட்டார். அவரால் வெல்ல முடிந்ததா? இல்லைதானே. இங்குள்ள மக்கள் யோசித்து அவர்களுக்கான மக்கள் பணியை செய்யக்கூடியவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு வாங்கி விட்டு சென்னைக்கு சென்று அமருபவர்களுக்கெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி பலமும் உள்ளது. அதேபோன்று இந்த முறையும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.
