தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களில் சமீபகாலமாகச் செய்திகளில் அடிக்கடி தென்படுகிற நபராக இருந்து வருகிறார் ரவி மோகன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட செய்திகள் தவிர்த்து, புதிய பட அறிவிப்புகளும் அவர் தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ravi mohan has 4 heroines in his next movie
இந்தியில் ரவி அறிமுகமாகப் போகிறார், அதற்காக அவர் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்குவதாகச் செய்திகள் வந்தன.
அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் முதல் படத்தின் பெயர் ‘ப்ரோகோடு (brocode) என்ற அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது. சந்தானத்தை நாயகனாகக் கொண்டு டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி படங்களைத் தந்த கார்த்திக் யோகி இதனை இயக்கவிருக்கிறார். அனிமல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அர்ஜுன் ரெட்டி படங்களுக்குப் பின்னணி இசை தந்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இதற்கு இசையமைக்கப் போகிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருக்கின்றனராம். இவர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்த அப்டேட்களாக வரும் என்றிருக்கிறார் இயக்குனர்.
தற்போது ரவி மோகன் தனது 32வது, 34வது படங்களாக ஜீனி, கராத்தே பாபு படங்களில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் இணைகிற ‘பராசக்தி’யில் வில்லனாக நடிக்கிறார். இது போக ‘தனி ஒருவன் 2’ அவரது கைவசம் இருக்கிறது. அந்த வகையில் இது அவரது 36வது திரைப்படம்.
’கராத்தே பாபு’வில் தாவ்டீ ஜிவால் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இது போக வேறு நாயகிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
’ஜீனி’யில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி என மூன்று நாயகிகள்.
‘பராசக்தி’யில் ஸ்ரீலீலா, பாப்ரி கோஷ் என்று சிலரது பெயர்கள் இடம்பெற்றாலும், ரவிக்கு ஜோடி உண்டா எனத் தெரியவில்லை.
இந்த நிலையிலேயே, இந்த ‘ப்ரோகோடு’ படத்தில் 4 நாயகிகள் என்ற தகவல் வந்திருக்கிறது.
போகிற போக்கைப் பார்த்தால், ’தெலுங்கு பட நாயகர்கள் போன்று இரண்டுக்கும் மேற்பட்ட நாயகிகள் இருக்கிற கதைகளுக்குத்தான் ரவி மோகன் முக்கியத்துவம் தருவாரோ’ என்ற கேள்வி பலமாக எழும் போல..!