தலைமை காஜி அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியது. ramalan fasting started all over tn
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கருதப்படுகிறது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.
ரமலான் மாதத்தில் தான் நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது என அவர்கள் நம்புகின்றனர். இந்த புனித மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் கடும் நோன்பிருப்பார்கள். இதையடுத்து கடைசி நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,”தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று பிறை தென்பட்டுள்ளது. எனவே நாளை 02.03.2025 முதல் தமிழ்நாட்டில் புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
தலைமை காஜியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கினர். நாகூர், மதுரை, திருநெல்வேலி உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கை! ramalan fasting started all over tn
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் பச்சரிசியை மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற எதுவாக இன்று முதல் 31-03-2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது சென்னை மாநகராட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.