பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ramadoss hits out pmk district secretary
இந்தநிலையில், இருவரும் ஒன்றிணைய வலியுறுத்தி பல நிர்வாகிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், ராமதாஸின் ஆதரவாளரான தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதன்படி, ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் ஒன்றிணைய வலியுறுத்தி நாளை (ஜூன் 23) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டம் வெளியே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ம.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த போராட்டத்தில் வன்னியர் சொந்தங்கள் மற்றும் பாமகவினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதை அறிந்த ராமதாஸ், ம.க.ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு,”யாரைக் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தாய்?” என்று கோபமாக திட்டியுள்ளார்.
இதனால் ம.க.ஸ்டாலின் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடக்குமா? நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், தனியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் முடிவோடு ம.க.ஸ்டாலின் இருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.