ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், சம்பந்தமேயில்லாமல் வேறொன்றை உதாரணம் காட்டி வம்பில் மாட்டிக்கொள்வது சில திரையுலகப் பிரபலங்களின் வழக்கம். ‘அதுல என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ‘வாலண்டியராக’ அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ram gopal varma criticize rajinikanth chiranjeevi
சமீபத்தில் தொலைக்காட்சியொன்றில் ‘தென்னிந்தியாவில் கமர்ஷியல் சினிமா அடைந்துள்ள பிரபல்யம்’ பற்றிப் பேசியவர், இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் ‘ப்ளாக்பஸ்டர்’ படங்கள் பல மொழிகளில் ‘ரீமேக்’ ஆகியதாகக் குறிப்பிட்டார். மசாலா படங்களை உருவாக்குவதில் அவரது படங்களின் தாக்கம் என்ற அர்த்தத்தில் அதனைச் சொல்லியிருக்கிறார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல், ‘ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் அமிதாப் பச்சனின் படங்களை ‘ரீமேக்’ செய்து புகழ் பெற்றனர். எழுபதுகள், என்பதுகள் முழுக்க இந்த ட்ரெண்ட் தொடர்ந்தது’ என்று அவர்களை வாரியிருக்கிறார்.

தொண்ணூறுகளில் அமிதாப் பச்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த பிறகு, இசை நிறுவனங்கள் தங்களது பாடல்களைப் பிரபலப்படுத்தும் வகையில் படங்கள் தயாரிக்கத் தொடங்கியதாகச் சொல்லியிருக்கிறார் வர்மா.
தங்களது ஆங்கில அறிவால் இந்தி திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் சர்வதேச பட நிறுவனங்களுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டபோது, தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் உலகளவிலான சினிமா தொழில் துறையுடன் உறவைப் பேண விரும்பவில்லை என்றிருக்கிறார்.
கூடவே, தென்னிந்திய சினிமாவானது தொடர்ந்து ‘மாஸ் அப்பீல்’ கொண்ட படங்களைத் தயாரிப்பதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டி வருவதாகவும் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார் வர்மா.
’இவருக்கு இதே வேலையா போச்சு’ என்று மேற்சொன்ன ‘சூப்பர்ஸ்டார்’களின் ரசிகர்கள் அலுத்துக்கொண்டால் இந்த விவகாரம் ‘புஸ்’ஸென்று ஆகும்..!