மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது: மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா குறித்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது.
சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கவனிக்கும்போது, வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சில அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமோ என்று நான் கருதினால் அதில் வியப்பில்லை.
மேலும் ஆர். என். ரவி (தற்போதைய தமிழ்நாடு ஆளுநர்) மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது என்னிடம் தெரிவித்தார். தற்போதைய நடைமுறைகளின்படி, அமித்ஷா என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியல் அமைப்பை சீர்குலைக்கக் கூடியாது; நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தகர்க்கின்றது. மத்திய அரசு ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மேலும், ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் வகையிலான இத்தகைய ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
