கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF மாடல்தான் அதிகாரப் பகிர்வுக்கு முன்னுதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சுட்டிக் காட்டி உள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இன்றும் ‘கூட்டணி ஆட்சி’யை வலியுறுத்தி காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல், கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.
காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது; நட்பு +பங்கு
இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.
முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு “பை-பை” சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே. அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது —
ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
IUML,
Kerala Congress (M),
RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித் துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.
இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள், UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை.
வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில்.
ஒன்றாகப் போராடு!
ஒன்றாக ஆட்சி செய்!
ஒன்றாக மக்களுக்கு வழங்கு!
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
