பாமக நிர்வாகி சோளிங்கர் சக்கரவர்த்தி கொலை… விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published On:

| By vanangamudi

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகியும் வழக்கறிஞருமான சக்கரவர்த்தி கடந்த ஜூன் 11-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், போலீஸ் விசாரணையில் சக்கரவர்த்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. இவர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். pmk sholinghur chakravarthi murder background

கடந்த மார்ச் 8-ஆம் தேதி சோளிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சீனிவாசன் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஜாமீனில் வெளியே எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசனின் நண்பர்கள் பிரபு, மாதவன் ஆகியோர் சக்கரவர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்தநிலையில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி சக்கரவர்த்தி தனது பைக்கில் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மாதவன், பிரபு ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மாதவன் பைக் ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த பிரபு, நாட்டுத்துப்பாக்கியால் சக்கரவர்த்தியை நோக்கி சுட்டதில் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.

முதலில் சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சக்கரவர்த்தியை நாட்டுத்துப்பாக்கியால் கொலை செய்தது மாதவன், பிரபு என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் பெல் சாலையோரம் பதுங்கியிருந்த மாதவன் மற்றும் பிரபுவை பிடிக்க சோளிங்கர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன் 14) மாலை 5 மணியளவில் சென்றனர்.

அப்போது மாதவன் போலீசிடம் பிடிபட்டார். பிரபு போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பிரபுவின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், எங்கள் நண்பன் சீனிவாசனை கொலை செய்தவர்களை சக்கரவர்த்தி பெயிலில் எடுத்ததால் அவரை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தனர்” என்கிறார்கள்

பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சக்கரவர்த்திக்கு எதிரான சதித்திட்டத்தை கண்டறிந்து முறியடிக்க காவல்துறை தவறியது ஏன்? தமிழக காவல்துறையின் உளவுத் துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதா? என்றும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share