மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஏப்ரல் 1, 2026 முதல் புதிய வருமான வரிச் சட்டம் 2025 (New Income Tax Act) அமலுக்கு வரும் என்று அறித்துள்ளார்.
மேலும், சாதாரண மக்கள் எளிதாக வரி தாக்கல் செய்ய வசதியாக வருமான வரி படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த புதிய மாற்றங்கள் காப்பீட்டு வட்டி விருதுகளுக்கான விலக்கு, சிறு வரி செலுத்துவோருக்கான ‘nil deduction certificates’ (கழிவு இல்லா சான்றிதழ்கள்) மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ITR 1 மற்றும் ITR 2 படிவங்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் ஜூலை 31 வரை வரி தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த 2024 ஜூலை மாதம் வருமான வரிச் சட்டம் 1961-ஐ விரிவாக மறுஆய்வு செய்ய அறிவித்ததாகவும், இது மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு வருமான வரிச் சட்டம் 2025 ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். “வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில், சாதாரண மக்கள் சிரமமின்றி வரி செலுத்த வசதியாக படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினங்களில் வரிச்சுமையைக் குறைக்கும் வகையில், சில முக்கியப் பிரிவுகளில் வரி வசூல் (TCS) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணத் தொகுப்புகள் விற்பனைக்கான TCS விகிதம் தற்போதுள்ள 5% மற்றும் 20% இலிருந்து எந்தவிதமான தொகை வரம்பும் இன்றி 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வோருக்கான TCS விகிதமும் 5% இலிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சேவைகள் மீதான வரி நிறுத்தம் (withholding) குறித்தும் நிதி அமைச்சர் விளக்கினார். பணியாளர் சேவை வழங்குதல் (supply of manpower services) என்பது, குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில், ஒப்பந்ததாரர்களுக்கான TDS (மூலத்தில் வரி பிடித்தம்) வரம்பிற்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால், இந்தச் சேவைகளுக்கான TDS விகிதம் 1% அல்லது 2% ஆக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தரவு மையங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு கிளவுட் நிறுவனங்களுக்கு 2047 வரை tax holiday வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வரி செலுத்துவோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் கல்விக்கான செலவினங்களில் வரிச்சுமை குறையும். சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் வரி தாக்கல் செய்வது எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
