சென்னையில் புதிதாக 30 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது துறை அமைச்சர் நேரு சென்னை மாநகராட்சிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
“சென்னை மாநகராட்சியில் ரூ.75 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து தட சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவர் ரூ.95 கோடியில் உயர்த்தப்படும். மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடியில் பூங்காக்கள், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பினை தவிர்க்கவும் ரூ.120 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடியில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சிக் கூடங்கள் ரூ.60 கோடியில் நவீன வதிகளுடன் மேம்படுத்தப்படும்.
சென்னையின் முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு மூலம் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும் என அறிவித்தார் அமைச்சர் நேரு.