கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விஷவாயு தாக்கிய சம்பவத்தில் நேற்று (அக்டோபர் 4) தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தாலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியாகி இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரை மீட்க முனைந்த இரு தூய்மைப் பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் வேளையில், இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? போலி விடியல் ஆட்சியின் விழிகளுக்கு எப்போது தான் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வு புலனாகும்?
கார் ரேஸ்ஸூக்கும் விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசுக்கு ஏழைத் துப்புரவுத் தொழிலாளியின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரம் ரூபாயில் பாதுகாப்புக் கவசம் வாங்க முடியாதா? தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைத் துச்சமெனத் தூக்கியெறிந்து சாகடித்துவிட்டு மேடைகளில் மட்டும் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் அறிவாலயம் ஆட்சி தமிழக மக்களால் தூக்கியெறியப்படும்!” என தெரிவித்துள்ளார்.