2026 தேர்தல் தோல்வி பயத்தில் திமுக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 19) விமர்சித்துள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நயினார் நாகேந்திரன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாடு என்பது அரசியல் மாநாடல்ல, பக்தர்களின் மாநாடு.
தமிழக அரசு சார்பில் அனைத்துலக முருகன் மாநாடு பழனியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு எங்களை அவர்கள் அழைக்கவில்லை. ஆனால், மதுரை முருகன் மாநாட்டிற்கு திமுகவை நாங்கள் வரவேற்கிறோம்.
சில தர்மங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால், அதற்கு இறைவன் சில அவதாரங்களை எடுப்பார். தற்போது நடைபெறுகிற கலியுகத்தில் முருக அவதாரம் எடுத்திருக்கிறார். 2026 தேர்தலில் அதற்கான முடிவுகள் தெரியவரும். Nainar Nagendran says dmk fear 2026 election
முருகன் மாநாட்டை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், பொதுமக்கள் எங்களுக்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள்.
திமுக தற்போது தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். விசிக 15 தொகுதிகள் கேட்கப்போவதாக எனக்கு செய்திகள் வந்தது. அதனால் முருகன் மாநாட்டை விமர்சிக்கிறார்கள்.
பவன் கல்யாண் முருக பக்தர். அவர் ஏற்கனவே அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். ஆந்திராவில் உள்ளவர்கள் இங்கே வந்து சாமி கும்பிடக்கூடாது என்று சேகர் பாபு சொல்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.