மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக மோடி இன்று (ஜூன் 9) பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், எதிர்கட்சிகள் பாஜக மற்றும் மோடி மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 9) தனது ட்விட்டர் பக்கத்தில், “ மே 28, 2023 நினைவிருக்கிறதா?
செங்கோலுடன் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள் –
மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.
அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும்.
செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக அவர், “நேருவை தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் பிரதமர், மோடி என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் நேரு 1952-ல் 364 இடங்களிலும், 1957-ல் 371 இடங்களிலும், 1962-ல் 361 இடங்களிலும் என தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
நேரு மட்டுமல்ல இந்திரா காந்தி 1966, 1967, 1971 மற்றும் 1980 என 4 முறை பிரதமராக பதவி ஏற்றார்.
வாஜ்பாய் 1996, 1998 மற்றும் 1999 ஆகிய மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
ஆனால் மோடியின் பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்ன வேண்டுமானலும் சொல்லி தம்பட்டம் அடித்துகொள்கிறார்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வலுவான எதிர்க்கட்சி… மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்வதற்கு முன் ரஜினி பேட்டி!