கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டின் முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா சிகிச்சை பெறுவோரின் சிகிச்சைக்கான செலவை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே வழங்கும் திட்டம் என 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன்பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தவிர மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவு திட்டம், தாயுமானவர் திட்டம் என அடுக்கடுக்கான பல மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நடத்திய ஆய்வில் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் தங்களது பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வியை தொடர முடியாமல் தவிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ’அவர்களுக்காக என்ன திட்டம் கொண்டு வரலாம்’ என தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர்களுடன் சமீபத்தில் ஆலோசனை செய்தார் ஸ்டாலின்.
அப்போது அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் தாய் தந்தையை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட இருக்கிறார் என்கின்றனர் தலைமை செயலக அதிகாரிகள்.