மணி சங்கர் ஐயர், உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில் எனது உயரம் எனக்கு தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 23) தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதைத்தொடர்ந்து முதல்வரிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிள் சில கேள்விகளை முன் வைத்தனர். இந்தத் தேர்தல் “திராவிட மாடல் vs வட இந்தியா மாடல்” என்று சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு, “மதச்சார்பின்மை, சமூகநீதி, பாசிசத்தை எதிர்ப்பது என்பதே திராவிட மாடலின் அடிப்படைகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எங்களது திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ‘திராவிட மாடல்’ என்ற போர்வையை பயன்படுத்திக் கொண்டு, உள்ளுக்குள் தாங்கள் செய்ய வேண்டியவற்றை செய்து வருகின்றன,” என்றார்.
“தமிழகத்தில் பலமுனைப் போட்டி உள்ளது என்று நீங்கள் பார்க்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “நிச்சயமாக பலமுனைப் போட்டி இருக்கலாம். ஆனால் அது பலம் பொருந்திய போட்டியாக இல்லை” என்று பதிலளித்தார்.
தமிழகத்திற்கு “பிரதமர் இந்த மாதத்தில் மூன்று முறை வரவிருக்கிறார்” தமிழகத்தில் கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக இருப்பது குறித்த என்ற கேள்விக்கு, “ நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். பிரதமரும், அமித்ஷாவும் அடிக்கடி வர வேண்டும். இந்த ஆளுநரை மாற்றக்கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரச்சாரம்,” என்றார்.
மணி சங்கர் ஐயர், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட பலரும் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்; அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “தலைவர் (கலைஞர்) ஏற்கனவே கூறியுள்ளார்.. அதேபோல் எனது உயரம் எனக்கு தெரியும்; அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்,” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
