மதிமுக, மமக மற்றும் மநீம கட்சிகளுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
திமுக கூட்டணியில் நேற்று பிப்ரவரி 22-ந் தேதி முதல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவின் டிஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பேச்சுவார்த்தையில், முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் (சோடங்கர்), சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் தியோ சிங், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று மதிமுக, மமக, மநீம ஆகிய கட்சிகளுடன் திமுக குழு, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
