கரூரில் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கரூர் துயரம் குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில், ” கரூரில் நடந்தது பெரும் துயரம். கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம். இனி நடக்க கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும் தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னரும்,. என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.
உடனே அன்று இரவே கரூருக்கு சென்றேன் குழந்தைகள் பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்து அதை உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவங்களுக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இதனிடையே சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும் பொய் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னுடைய தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் நமது தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நமது எல்லோரின் கடமை நீதியரசர் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு எல்லா அரசியல் கட்சிகள் பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள் வகுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
அத்தகைய விதிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்களை எல்லாவற்றிற்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பிழைகள் என எல்லாவற்றையும் விளக்கி வைத்துவிட்டு எல்லோரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு பல வகைகளில் முன்னோடியாக தான் இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை” என்று தெரிவித்துள்ளார்.