அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளராகவும், மூத்த அமைச்சராகவும் பதவி வகிக்கும் துரைமுருகன், வயது மூப்பு காரணமாக அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காக தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்று வருகிறார். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வரும் நிலையில், நேற்று வீட்டில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
