மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இருவரும் இணைந்து ஜூலை 5-ந் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். Maharashtra Imposition of Hindi
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மராத்தி மொழி மற்றும் ஆங்கில மொழி வழி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை இந்தி மொழியை கற்பிப்பது கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு திருத்தப்பட்ட ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில் தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி மொழி பொதுவான 3-வது மொழியாக இருக்கும் என இடம் பெற்றிருந்தது. மேலும் வேறு ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாக கற்க விரும்பினால் அதற்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்கிற அம்சம் சேர்க்கப்பட்டிருந்தது.
இதுவும் இந்தி மொழியை திணிக்கிற முயற்சி என்று கூறி எதிர்க்கட்சிகளும் மராத்தி மொழி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை அழித்து இந்தி மொழியைத் திணிக்கும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இணைந்து பிரம்மாண்ட பேரணியை ஜூலை 5-ந் தேதி நடத்த உள்ளன.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். தற்போது இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இருவரும் இணைந்து ஜூலை 5-ந் தேதி போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதேபோல அடுத்தடுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிவசேனா அறிவித்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் புயல் வீசும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.