ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு… பூட்டிய வீட்டை சீல் வைக்க ED-க்கு அதிகாரம் உள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Selvam

madras high court ed no power to seal premises

சோதனைக்கு செல்லும் வீடுகள், அலுவலகங்கள் பூட்டியிருந்தால் அவற்றை சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 18) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை, அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சோதனை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் படி, பணப்பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தாலே அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம். டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக 41 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், “அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களுக்கும், உங்களுடைய வாதங்களுக்கும் எந்தவகையிலும் ஒத்துப்போகவில்லை. வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ” சோதனைக்கு செல்லும் வீடுகள், அலுவலகங்கள் பூட்டியிருந்தால் அவற்றை சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் பிரிவு 17-ன் படி, பூட்டிய வீட்டை உடைப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.

மேலும், இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஒப்படைக்கப்படும். இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் முடித்துவைக்க வேண்டும்’ என்றார்.

அப்போது நீதிபதிகள், “பூட்டிய வீடு மற்றும் அலுவலங்களில் சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் கூட, சீல் வைத்துள்ளீர்கள். இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை வழக்கறிஞர், “டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை இந்த வழக்கை விசாரிக்காமல் உயர்நீதிமன்றம் காத்திருக்கலாம்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்காமல் சோதனை நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பி, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். madras high court ed no power to seal premises

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share