சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி உள்ளது. இங்குள்ள அறைகள் பராமரிப்பு பணிகளுக்கு பொதுப்பணித்துறை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி டெண்டர் கோரியது. இந்த டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது.
டெண்டர் கோரி விண்ணப்பிக்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சான்று கோரி விண்ணப்பித்தும் சான்று வழங்காததால் டெண்டர் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இரண்டு ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 4) நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்று வழங்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதி வழங்கி இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
