திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுதாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (ஜூன் 24) உத்தரவிட்டது. madrai HCB order on tamil prayers at thiruchendur
தூத்துக்குடி மாவட்ட ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுளான முருகன் கோயிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவை சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, ”திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவில் தரப்பில் யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழக அரசின் வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.