திருச்சி சிறுகனூரில் நடைபெறும் 12 ஆவது மாநில மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12-வது மாநில மாநாடு இன்று (மார்ச் 9) மிகப்பிரமாண்டமாகத் தொடங்கியது. மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கழகக் கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவின் மேற்பார்வையில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த மாநாட்டுத் திடல் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளும் வாக்குறுதிகளும்:
கடந்த 2021-ஆம் ஆண்டு இதே திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான், “பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை” உள்ளிட்ட ஏழு முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் அறிவித்தார். அது தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்றைய மாநாட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் மற்றும் வரும் தேர்தலுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள சுமார் 10 லட்சம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கூட்டத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது.
