நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், தனக்கு பொருளாதார ரீதியாக பல கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தன் வெளி உலக செயல்பாடுகளை முடக்கியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதே சமயம், சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் குறித்தோ, விவாகரத்து மனு தாக்கல் குறித்தோ விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 28) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்புவிடம், விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “விவாகரத்து என்பது ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான மிகவும் தனிப்பட்ட விஷயம். அதற்குள் என்னென்ன பிரச்சினைகள் இருக்கும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மற்றவர்களின் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை. விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், அவரது குடும்பப் பிரச்சினையை அரசியலுடன் இணைத்துப் பேசுவது தவறானது. இதை அரசியலாக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். மேலும், ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ள சூழலில், இந்த விவாகரத்து செய்தி அவருக்கு அரசியல் ரீதியாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.அண்ணாமலை போன்ற பிற அரசியல் தலைவர்களும் இது விஜயின் தனிப்பட்ட விஷயம் என்றும், அவர் இதைக் கடந்து வர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
