மநீம கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசித்தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவெடுக்கப்பட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இன்று (மார்ச் 24) இரவு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கமல்ஹாசன் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பிறகு தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
“என்னுடைய பிரஸ் மீட் எல்லாம் பார்த்திருப்பீங்க. ஒரே கொள்கை, ஒரே இலக்கை நோக்கித்தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் அதேதான். நம்முடைய நாட்டிற்கான ஒரு முக்கியமான போராட்டமாக, அதில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டியது என் கடமை என்பதை நான் முடிவு செய்து பல நாள் ஆகிவிட்டது
பாரத் ஜோடோ யாத்திரையில் நடக்க ஆரம்பித்ததில் இருந்து இங்கு வந்து கைகொடுத்ததிலிருந்து இது என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன். எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை. சுயநலமற்றதாக, கடமையாக அது இருக்க வேண்டும் என்று நம்பி வந்தவன் நான். அதே பயணத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன்.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பது ஒரு தமிழ் குடிமகனின் உரிமை. ஒரு கட்சித் தலைவன் என்ற நிலையிலும் நான் எடுத்திருக்கும் முடிவு, இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான்.
முதல்வரை சந்தித்த பொழுது, ‘உங்களை நான் ஆட்சி கட்டிலில் மீண்டும் பார்க்கிறேன்’ என்று வாழ்த்தக் கூட இல்லை, ‘எதிர்பார்ப்பு இது எங்களுக்கு, அதை நீங்கள் நடத்திக் காட்டுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். நாங்கள் அவர்களுடன் நிற்போம். யார் என்ன சொன்னாலும் என் நிலை இதுதான். எனது கட்சியினருடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு இது” என்றார்.
“சுயமரியாதை பற்றி அவர்களுக்குத் தெரியாததா? “அவர்கள் என்னை பெரும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். இவர்களுடன் நிற்பதைப் பெருமையாகவும், கடமையாகவும் நினைக்கிறேன்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த நிபந்தனையற்ற ஆதரவு என்ற முடிவு சென்டிமென்டலாக வொர்க் அவுட் ஆகி, 40-க்கு 40 இடங்களை வென்று சரித்திரம் படைத்தது. அதேபோல இன்றைக்கு அவர் எடுத்திருக்கிற இந்த முடிவின் மூலம், நிச்சயமாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது கமலின் பேச்சு மூலம் உறுதி செய்துள்ளார்.
கலைஞரால் ‘கலைஞானி’ என்று பெயர் சூட்டப்பட்டவர் கமலஹாசன். தலைவர் கலைஞர் இன்று இருந்திருந்தால் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு வாழ்த்தியிருப்பார். அவர் இல்லாத இந்தத் தருணத்தில், அவர் பெற்ற மகனை அரியாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்ற உணர்வோடு கமலஹாசன் செய்திருப்பதை திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் நன்றியுடன் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து தொகுதி கொடுக்க முன்வந்தபோது அதை ஏற்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “தொகுதி முக்கியமே இல்லைங்க. நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெல்லவில்லை என்று சொன்னது, மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை, அரசியல் தான் தோற்கடித்தது” என்று தனது பாணியில் பதிலளித்தார்.
