ஜுன் 22 அன்று கட்டாயம் ‘ஜனநாயகன்’ குறித்த ஏதாவதொரு அப்டேட் இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை விஜய் ரசிகர்களிடத்தில் இருந்தது. காரணம், அன்று அவரது பிறந்த நாள். அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும்விதமாக நள்ளிரவில் வெளியானது ‘பர்ஸ்ட் ரோர்’ வீடியோ.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று விஜய்யின் குரலோடு இது தொடங்குகிறது. தொடர்ந்தாற் போல, ‘ஒரு தலைவனின் எழுச்சி என்பது அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்கானதாக இருக்கும்’ என்கிற வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒளிர்கின்றன. Jana Nayagan first roar video how is it
பிறகு, ‘தளபதி..’ என்றொலிக்கிற குரல்களுக்கு நடுவே அனிருத்தின் இசை ‘ஏஹோ’வென மெல்ல வேகமெடுக்கிறது. ப்ரவுன் நிற ஷு அணிந்தவாறு காவல் துறைக்கான காக்கி உடையில் மெல்ல நடந்து வருகிறார் விஜய். ஆங்காங்கே பற்றி எரிகிற தீயும் சிதறிக் கிடக்கிற பொருட்களும் ‘இது கலவர பூமி’ எனக் காட்டுகின்றன.
அவற்றினூடே நடந்து வந்து, திரையில் முகம் பார்த்து பெரிய வாளொன்றை ரத்தம் தோயப் பிடித்தவாறு இருக்கிறார் விஜய். பிறகு, இன்னொரு கையால் நீளமான கத்தியின் கூர்முனையைக் கொண்டு மீசையை முறுக்குகிறார். அதனைத் தூக்கி திரையை நோக்கி வீசுகிறார்.
பிறகு, படத்தின் டைட்டிலை அடுத்து ‘ஒன்றாக எழுச்சியுறுவோம்’ என்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒளிர்கின்றன. வரும் ஜனவரி 9 முதல் படம் தியேட்டர்களில் வெளியாகும். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தியில் வெளியிடப்படும் என்ற அறிவிப்புகள் திரையில் தெரிகின்றன.
நிச்சயமாக, இந்த வீடியோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
அதேநேரத்தில், இந்த ‘பர்ஸ்ட் ரோர்’ படத்தில் வரும் சிங்கிளா என்று தெரியவில்லை. இந்த வீடியோ ‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ‘டெஸ்ட் ஷூட்டா’ என்றும் தெரியவில்லை.
படம் வெளியாவதற்கான கால அவகாசம் ஆறு மாதத்திற்கும் அதிகம் என்பதால், இன்னும் பலப்பல ‘புரோமோஷன்’கள் செய்ய வேண்டியதிருக்கும். விழாக் காலங்களில் சிறப்பு அறிவிப்புகளைத் தர வேண்டியிதிருக்கும். ’அதற்கெல்லாம் சரக்கு வேண்டுமே’ என்ற முன்னெச்சரிக்கை இந்த ‘பர்ஸ்ட் ரோர்’ரில் தெரிகிறது. அதை மீறியும் வீடியோ ஈர்ப்பைத் தருவதை மறுப்பதற்கில்லை.