ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் பொதுமக்கள் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Israel’s Fierce Attack Devastates Iran
அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக இஸ்ரேல்- ஈரான் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்க தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி தருகிறது.

தற்போது இஸ்ரேல்- ஈரான் இடையேயான உக்கிரமான யுத்தமாக இந்த மோதல் உருமாறி உள்ளது. ஈரானின் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளின் செல்போன்களை டிராக் செய்து துல்லிய தாக்குதல் மூலம் அவர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம், உளவுத்துறை அமைச்சகம் உள்ளிட்டவைகளையும் இலக்கு வைத்து தாக்குகிறது இஸ்ரேல். இதனால் ஈரானின் பல மாகாணங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன என்கின்றன சர்வதேச செய்தி நிறுவனங்கள்.

இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது டிரோன்கள், ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி தருகிறது. ஆனால் தாங்கள் ஏவும் டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் நடுவானில் இடைமறித்து அழிக்கிறது என்பது ஈரானின் குற்றச்சாட்டு.
இதனிடையே அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக இனி இஸ்ரேலுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறாது எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.
இதனிடையே ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்காவின் தூதரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தில் சிக்கியிருக்கும் தங்களது நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.