இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான யுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென அதிகரிக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. Israel-Iran War: Fears of Sudden Hike in Petrol and Diesel Prices
அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான இஸ்ரேல்- ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் மீதான இஸ்ரேலின் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலமான இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தன. இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலின் முக்கிய நகரங்களைத் தாக்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. ஈரான் ஏவுகிற நூற்றுக்கணக்கான டிரோன்களை இஸ்ரேல் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தும் வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி துறை விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஈரான் ராணுவத்துக்கு இணையான அந்நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் புரட்சிக் காவல் படையின் மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் அரசும் அறிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைச்சகங்களையும் இலக்கு வைத்து இஸ்ரேல் அழித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகளும் தப்பவில்லை. இந்த கச்சா எண்ணெய் கிடங்குகள், இஸ்ரேலின் தாக்குதலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன.
உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈரானும் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் தேவையில் 60% கச்சா எண்ணெய், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலராக உயர்ந்துள்ளது. இது இனிவரும் நாட்களில் இரு மடங்காக உயரக் கூடும் என்கின்றனர். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரக் கூடுமோ? என்கிற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை அதிகமாக உயர்வதைத் தடுக்க, ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயமும் உருவாகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து பொதுமக்களைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.