இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை வீசித் தாக்குதல் நடத்துவதால் அந்நாட்டில் ஜூன் 30-ந் தேதி வரை அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. Israel Extends State of Emergency Until June 30
அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாட்டை இஸ்ரேல் ஏற்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 3 நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று பார்வையிட்டார். அப்போது பேசிய நெதன்யாகு, அப்பாவி பொதுமக்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் கடுமையான விலையைத்தான் தர நேரிடும் என எச்சரித்தார்.
மேலும் இஸ்ரேலில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை பிரகடனம் ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலும் தொடர்வதால் இஸ்ரேல் முழுவதும் முன்னெச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்- ஈரான் மோதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு தங்களது நாட்டு குடிமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து ரஷ்ய நாட்டவரை வெளியேற்றும் பணியில் ரஷ்யா தூதரகம் ஈடுபட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்குப் பகுதியில் உள்ள தஜ்ரிஷ் Quds Square, இஸ்ரேல் தாக்குதலால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் டெஹ்ரான் மற்றும் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
இஸ்ரேலின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உள்துறை அமைச்சக அலுவலகம் சேதமடைந்தது.
