சுதீஷுக்கு மாநிலங்களவை எம்.பி.யாகும் அருகதை இல்லையா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருக்கும் நிலையில் அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக பொருளாளரும், பிரேமலதா சகோதரருமன சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக மீது கால்புணர்ச்சியும் பிடிக்காதவர்களும் மட்டுமே விமர்சனம் வைக்கின்றனர். இந்த கூட்டணியை தமிழ்நாடு முழுவதுவம் உள்ள தேமுதிகவினர் ஏற்றுக்கொண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
துணை முதல்வர் பதவி கேட்கிறோம் என்று வந்த தகவல் எல்லாம் கற்பனையானது.
கேப்டன் ஆன்மா பற்றி பேசுகிறார்கள். அவருடைய கடைகோடியில் இருக்கிற தொண்டர்தான் கேப்டன் ஆன்மா. தேமுதிகவுக்குச் சம்பந்தமே இல்லாதவங்க கேப்டன் ஆன்மாவைப் பற்றி பேசி கொண்டு இருக்காங்க. அதை நகைப்புக்குரிய விஷயமாதான் நான் பார்க்கிறேன்.
குடும்பத்தினருக்கே பொறுப்புகள் வழங்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். இது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. லட்சக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவரான சுதீஷ், கட்சி தொடங்கிய நாள் முதலே தேமுதிகவுக்கு உழைக்கிறார். அவர் அந்தப் போஸ்ட்டுக்கு அருகதை இல்லையா? ஏன் அவருக்கு கொடுக்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
