கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மோடி முகாம் நிகழ்வினை , பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (பிப்ரவரி 5) துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களையும், மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளோம்.
மக்களிடம் குறைகளை கேட்பதற்காக “உங்கள் குரல், எங்கள் செயல்” செயலி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தேர்தல் அறிக்கைக்கான குழுவினர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.
மோடி முகாம் என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டு இருக்கின்றது.
சாலை வசதி, தண்ணீர், விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக மக்கள் எங்களை அணுகுகின்றனர். திராவிடமாடல் அரசு தோல்வி அடைந்த அரசாக இருக்கின்றது. முதல்வர் திரும்பவும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற கனவில் இருக்கின்றார், அதனால் மக்களிடம் கனவை கேட்கின்றார். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. வரும் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும். 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தபடும் என தெரிவித்தார்.
10 வருடத்தில் ஜெ ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் இருந்ததோ, அதை மாற்றி விட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அதிமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு முழுமையாக உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகியது குறித்து பேசுகையில், அண்ணாமலை அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தொகுதி சுற்றுபயணத்தை மாற்றி கொடுக்க சொல்லி இருக்கின்றார், அதை பூதாகரமாக்கி விட்டார்கள்.
அண்ணாமலை சட்டபேரவைக்குள் நுழைய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் ஆசை. எங்கு போட்டியிடுவோம் என்பதை டெல்லி முடிவு செய்யும் என்றார்.
