பாமகவுக்கு 18 எம்.எல்.ஏ சீட்டும், 1 ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்ட நிலையில், மொத்தம் 24 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சமம் என்று அன்புமணி கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் பாமக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணியிடம், பாமக குறைவான தொகுதிகளில் போட்டியிடுகிறது. வெறும் 18 தொகுதிகள் தான் என்பது, என்ன மெசேஜை சொல்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அன்புமணி ராமதாஸ், “பாமகவிற்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை தொகுதி என்பது 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நிகரானது என்பதால், மொத்தம் 24 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சமம்” என்று கூறினார்.
மேலும் அவர், “தற்போது நிலவும் களம் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவிற்கும் சாதகமாக இருப்பதாகவும், திமுகவிற்கு பாதகமாக இருப்பதாகவும் , எங்கள் கூட்டணி சுமார் 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்” குறிப்பிட்டார்.
