திமுகவின் முதுகில் குத்தப் போகிறதா காங்கிரஸ்?

Published On:

| By Minnambalam Desk

Is Congress going to stab DMK in the back

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் பம்பரமாக ஈடுபடத் தொடங்கிவிட்ட அதே நேரத்தில், ‘காலங்களும் மாற காட்சிகளும் மாறுகின்றனவா?’ என்ற கேள்வியை அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இப்போதைக்கு இடம் பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவை பந்தாடிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் பாஜக ரொம்பவே சீண்டிக் கொண்டிருக்கிறது. Is Congress going to stab DMK in the back

இதனால் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை பாஜகவே உருவாக்குகிறது. அப்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்தால் அதிமுகவை உடைப்பதுதான் பாஜகவின் திட்டம். அதிமுகவின் வாக்கு வங்கியை தம் வசமாக்கிக் கொள்ள பாஜக இந்த யுக்தியை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பாஜகவின் இந்த அஜெண்டாவை புரிந்து கொண்டதாலோ என்னவோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக விஜய், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோருடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ‘முடித்து’ கொள்ளாமல் வைத்திருக்கிறாராம்.

பாமகவைப் பொறுத்தவரையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க துடிக்கும் மகன் அன்புமணிக்கு எதிராக கொந்தளித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அதே டாக்டர் ராமதாஸ்தான், பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தியையே ‘சமரசப் பேச்சுவார்த்தைக்கு’ அனுமதிக்கவும் செய்தார்.

இதனால் டாக்டர் ராமதாஸ், பாஜக நோக்கி செல்கிறாரா? என கேட்கப்பட்டது. ஆடிட்டர் குருமூர்த்தியின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், எந்த கூட்டணி நோக்கி நகரப் போகிறது பாமக? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை இன்று ஜூன் 27-ந் தேதி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசியிருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என செல்வப்பெருந்தகை ‘அதிகாரப்பூர்வமாக’ சொல்லி இருக்கிறார்.

அதேநேரத்தில் செல்வப்பெருந்தகையின் இந்த சந்திப்பு மிக முக்கியமான அரசியல் நகர்வுகளில் ஒன்று என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

“சோனியா காந்தி – ராகுல் காந்தி முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் எப்படி செயல்படும்? திமுக தலைமைக்கு நெருக்கடி தரும் வகையில் அது எப்படி செல்வப்பெருந்தகை, டாக்டர் ராமதாஸை சந்தித்து அரசியல் பேசியிருப்பார்” என்கிற கேள்விகளை நாம் முன்வைத்தோம்.

அரசியல் என்று வந்துவிட்டாலே ஜெயிப்பதுதான் இலக்கு. பெரும் பதவிகளை அடைவதுதான் லட்சியம். இதற்கு விதிவிலக்கு எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு தலைவரும் இல்லை.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் போராடி காப்பாற்றி வைத்திருக்கும் அதிமுகவை தம் பிடியில் இருந்து எளிதாக விட்டுத் தந்துவிடமாட்டார். தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை தாண்டி 2026 தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் பாஜக கூட்டணிக்கு அப்பால், தவெக விஜய், சீமான், பாமகவுக்கான கதவுகளையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரையில் அதிமுகவை முதன்மை சாய்ஸாக வைத்திருப்பவர். வேறுவழியே இல்லாமல் போனால் பாஜக – அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிடுவார் என்பதைத்தான் அவரது செயல்பாடுகள் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் நீடிப்பதைத்தான் விரும்பும். ஆனால், அரசியலில் அடுத்தடுத்து நகர முயற்சித்துக் கொண்டே இருக்கும் செல்வப்பெருந்தகைகளால், அப்படி எல்லாம் ஒரே கூட்டணியில் அமர்ந்துவிடத்தான் முடியுமா? என கண்சிமிட்டுகின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள்.

மேலும், பாஜகவுடனான அதிமுக உறவு சுமூகமாக இருக்கப் போவதில்லை என்பது ஊரறிந்த சேதிதான்.. எப்படியும் ‘எடப்பாடி தலைமையிலான அதிமுக’ பாஜக கூட்டணியை முறிக்கும். அப்போது மெகா கூட்டணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக + பாமக + தவெக விஜய் + நாதக சீமான் என்கிற அணி அமையும் போது தாமும் கை கோர்த்து பார்ப்போம். ஒருவேளை இந்த அணி வென்றால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதும் சாத்தியமாகும். அப்போது நமக்கும் அதிகாரத்தின் ‘ஒரு துண்டு’ எப்படியாவது கிடைத்துவிடும். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற நமது கனவும் நிறைவேறிவிடும் என்பதுதான் செல்வப்பெருந்தகையின் பெருங்கனவாம்.

சரி செல்வப்பெருந்தகை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால் திமுக தலைமையுடன் டெல்லி நெருக்கமாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, டெல்லியை சமாளிக்க ஆட்டுவிக்கும் பொம்மை போல கார்கே இருக்கிறாரே அவரை முன்வைத்து காய்நகர்த்திவிடலாம் என்பதும் செல்வப்பெருந்தகையின் ஸ்கெட்ச்சாம்.

“நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்” என்ற வரிகள் எல்லாம் எத்தனை நிஜம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share