மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்களுக்கு உதவ காப்பீட்டு ஆதரவை வழங்குவதில் இந்திய அரசாங்கத்தின் (Indian Government) வர்த்தக அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஒன்று நிலைமையை தினமும் கண்காணித்து வருவதாகவும், ஏற்றுமதியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. “ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் விருப்பங்களை மதிப்பீடு செய்து வருகிறோம்,” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்:
மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக கடல் வழித்தடங்களில் ஏற்பட்ட இடையூறு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை சமாளிக்க சுங்கத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்றுமதி சரக்கு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு திரும்பியுள்ளன. மேற்கு ஆசிய மோதல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளின் இயக்கத்தை பாதித்துள்ளது. இதனால் கடல் சரக்கு, விமான போக்குவரத்து செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரித்துள்ளன. மேற்கு ஆசியா இந்தியாவிற்கு ஒரு முக்கிய ஏற்றுமதி சந்தையாகும். இந்த பிராந்தியத்திற்கான நாட்டின் ஏற்றுமதி 58.8 பில்லியன் டாலர் ஆகும்.
இந்தியாவின் வர்த்தகமும் பாதிப்பு:
இந்த நெருக்கடி இந்தியாவின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்றும், இந்தப் பிராந்தியத்திற்கான சரக்கு ஏற்றுமதி மெதுவாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொழில் துறையினரிடமிருந்து தினசரி கருத்துக்களைச் சேகரிக்க அரசாங்கம் ஒரு கூட்டு கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. துறைமுகங்கள், கிடங்குகள் மற்றும் துறைமுகக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேற்கு ஆசிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு வரும் எல்பிஜி லோடு:
40,000 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றிச் சென்ற இந்திய டேங்கர் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக செல்கிறது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை, எல்பிஜியை ஏற்றிச் சென்ற இந்திய டேங்கர் ஷிவாலிக், ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பாகப் புறப்பட்டது. ஷிவாலிக் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றி, அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவை வந்தடையும். கூடுதலாக, மற்றொரு எல்பிஜி டேங்கர் இந்தியாவுக்குப் புறப்பட அனுமதி பெற்றுள்ளது. இது இரண்டு கப்பல்களை இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது.
