தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடருக்கு நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 16) கிட்னிகள் ஜாக்கிரதை என பேட்ஜ் அணித்து வந்தனர். இன்று கிட்னி திருட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
இந்தத் தீர்மானத்தின் மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கிட்னி முறைகேடு குறித்த தொலைக்காட்சி செய்தியை அறிந்து, முதல்வரின் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது
பள்ளிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகளில் அரசு குழு ஆய்வு செய்து, முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், 2017ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினார். “பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.