அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம் உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. பதப்படுத்திய பழங்களை மட்டும் உண்டு மகிழும் பலருக்கு, அத்திக்காயை எப்படிச் சமைப்பது என்று தெரிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் ருசியாக சமைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
அத்திக்காய் – கால் கிலோ (நல்ல இளம் காயாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். காயின் காம்பை உடைத்தால் பால் வரக்கூடிய அளவுக்கு இருப்பது போன்ற காய் என்றால் மிகவும் நல்லது)
பெரிய வெங்காயம் நறுக்கியது – 2
காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப
தக்காளி – ஒன்று
பூண்டு – 6- 8 பல்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு – தாளிக்க
கறிவேப்பிலை – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அத்திக்காயை சிறிது சிறிதாக வெட்டி நன்றாகக் கழுவிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
முக்கால் பதம் வெந்ததும் நீரில் இருந்து எடுத்து தனியாக வடிகட்டி வைக்கவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்கவும். கூடவே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் பூண்டு பல் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து வதக்கவும். இந்தப் பூண்டும், சோம்பும்தான் இந்த டிஷ்ஷுக்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது. பின் தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்து வடிகட்டிய அத்தியைப் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும். எண்ணெயில் வதக்க வதக்க உருளைக்கிழங்கு பொரியல் போலவே மொறுமொறுவென வர ஆரம்பிக்கும். அந்தப் பதத்தில் இறக்கி ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு எனத் தொட்டுக்கொள்ள வைத்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.