உங்கள் பணத்தை நிலையான வைப்புத்தொகையாக (Fixed Deposit – FD) வைத்துள்ள வங்கி திவாலானால், உங்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று கருதுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation) வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீடு வழங்குகிறது. இந்தக் காப்பீடு ரூ. 5 லட்சம் வரை மட்டுமே உள்ளடக்கியது. இதில் சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள் என அனைத்தும் அடங்கும். ஒரே வங்கியில் உங்களிடம் மொத்தம் ரூ. 12 லட்சம் இருந்தால், ரூ. 5 லட்சம் மட்டுமே பாதுகாக்கப்படும். மீதமுள்ள ரூ. 7 லட்சம் கிடைக்காது.
ஒரே வங்கியில் பல டெபாசிட்கள்:
ரூ. 10 லட்சத்தை ஐந்து நிலையான வைப்புத்தொகைகளாகப் பிரிப்பது ஆபத்தைக் குறைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே வங்கியில் ஒரு நிலையான வைப்புத்தொகையாக இருந்தாலும் சரி அல்லது பல நிலையான வைப்புத்தொகைகளாக இருந்தாலும் சரி, மொத்த காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாகவே இருக்கும். அதன் ஆபத்து அப்படியேதான் இருக்கும்.
ஆபத்தைக் குறைப்பதற்கான எளிய வழி:
உங்கள் பணத்தை வெவ்வேறு வங்கிகளில் பிரித்து வைப்பதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். உங்களிடம் 15 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் வங்கி A-வில் ரூ.5 லட்சம், வங்கி B-யில் 5 லட்சம் மற்றும் வங்கி C-யில் 5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் முழுப் பணமும் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்படும்.
கூட்டுக் கணக்கு மூலம் பாதுகாப்பை எவ்வாறு அதிகரிப்பது?
DICGC காப்பீடு தனிநபர் அடிப்படையில் கிடைக்கிறது. ஒரு நபரின் பெயரில் ரூ.5 லட்சம்,
வாழ்க்கைத் துணையின் பெயரில் ரூ.5 லட்சம்,
கூட்டுக் கணக்கில் தனியாக ரூ.5 லட்சம் என்று ஒரே வங்கியில் கூட நீங்கள் புத்திசாலித்தனமாக அதிக பணத்தைச் சேமிக்க முடியும். நீங்கள் வெவ்வேறு பொறுப்புகளில் (உதாரணமாக, தனிநபர், கூட்டு, அறங்காவலர், முதலியன) கணக்குகளை வைத்திருந்தால், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ரூ. 5 லட்சம் காப்பீட்டிற்கு நீங்கள் தகுதி பெறலாம். இருப்பினும், இது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது. எனவே புத்திசாலித்தனமாகத் திட்டமிடுவது முக்கியம்.
எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியா?
சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஆனால் அவற்றில் சற்று அதிக ஆபத்தும் உள்ளது. எனவே, இந்த வங்கிகளில் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக வைத்திருப்பது நல்லதாக இருக்காது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய வங்கிகள் அதிக நம்பகமானவையாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் உங்கள் பணம் முழுவதையும் ஒரே வங்கியில் வைத்திருப்பது நல்ல முடிவாது இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
