சன் டிவி நெட்ஒர்க் குழுமத்தை மோசடியான பங்குகள் மாற்றம் மூலம் தமது கட்டுப்பாட்டில் கீழ் கலாநிதி மாறன் கொண்டு வந்ததாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். How Did Kalanidhi Maran Take Control of Sun TV? Dayanidhi Maran Reveals in Legal Notice
சன் டிவி நெட் ஒர்க் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரர் தயாநிதி மாறன், வழக்கறிஞர் சுரேஷ் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், சன் டிவி பங்குகளை எப்படி எல்லாம் கலாநிதி மாறன் மோசடியாக மாற்றி செயல்பட்டார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை முறைகேடாக தமக்கு மாற்றி சன் டிவி குழுமத்தையே தமது கட்டுப்பாட்டில் கலாநிதி மாறன் எப்படி கொண்டு வந்தார் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு அனுப்பிய நோட்டீஸில் இடம் பெற்றுள்ள விவரங்களின் படி..
- கலாநிதி மாறன் தன்னிச்சையாக, இதர பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் 12 லட்சம் பங்குகளை தமக்கு ஒதுக்கீடு செய்து கொண்டார்.1 பங்கின் விலை ரூ10 என ரூ1.2 கோடி மதிப்பிலான இந்த பங்குகளை தமது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார். ஆனால் கலாநிதி மாறன் தமக்கு மாற்றிய பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ3,500 கோடி. இந்த முறைகேடான பங்கு மாற்றம் மூலம் சன் டிவி குழுமத்தின் 60% கட்டுப்பாடு கலாநிதி மாறன் வசமானது.
- 2003-ல் கலாநிதி- தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன் மறைந்த போது, அவரது பெயரில் 95,000 பங்குகள் இருந்தன. இந்த பங்குகள் முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன் பெயருக்கு மாற்றப்பட்டு பின்னர் கலாநிதி மாறனுக்கு விற்கப்பட்டன. இந்த பங்கு மாற்றத்துக்கு இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என எந்த ஆவணத்தையும் முதலில் கொடுக்காமல் பங்கு மாற்றங்களுக்கு பின்னரே கலாநிதி மாறன் தரப்பு இணைத்தது என்பதும் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு.
- சன் டிவி குழுமத்துடனான இதர நிறுவனங்களில் முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கும் சமமான பங்குகள் இருந்தன. இந்த நிறுவனங்களிலும் கலாநிதி மாறன் மோசடியான பங்கு பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
- சன் டிவி குழும நிதி, தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்பட்டன; கலாநிதி, காவேரி கலாநிதி மாறன் ஆகியோரை வளப்படுத்திக் கொள்ள இந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டன என்பதும் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு.