பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. High Court orders
பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில் இந்த வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருப்பதாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதை கண்ட நீதிபதி வேல்முருகன், “பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி வேல்முருகன், “இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபியும், சென்னை காவல் ஆணையரும் அறிவுரை வழங்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறினால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நீக்க வேண்டும் என்றும் கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
அதோடு இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி வேல்முருகன். High Court orders