ஹஸ்னைன் நக்வி Haldikatti Inscription History
ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அண்மையில் அழுத்தமான ஒரு தகவலைத் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஹல்திகாட்டியில் உள்ள கல்வெட்டைத் திருத்தி, 1576ஆம் ஆண்டு ஹல்திகாட்டி போரில் மகாராணா பிரதாப் வெற்றி பெற்றார் என்று அறிவித்ததாகவும், அவர் தோல்வியடைந்ததாக முதலில் இருந்த தகவல்களை மாற்றியதாகவும் கூறினார். Haldikatti Inscription History
இதனைத் தனது “மிகப்பெரிய சாதனை” என்று வர்ணித்த தியா குமாரியின் அறிக்கை, வரலாற்றுத் துல்லியம், கலாச்சாரப் பெருமை, வரலாற்று விவரங்களை வடிவமைப்பதில் பொது நபர்களின் பங்கு போன்ற விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. சிறந்த வீரரான மகாராணா பிரதாப், இந்திய வரலாற்றில் முகலாய ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். இருப்பினும், ஒரு வரலாற்றுக் கல்வெட்டை மாற்றுவதற்குத் தீவிரமான ஆய்வு தேவை.

இந்தக் கட்டுரை ஹல்திகாட்டி போரின் வரலாற்று உண்மைகளை ஆராய்கிறது. அதன் கதையாடலை மாற்றுவதன் தாக்கங்களை மதிப்பிடுகிறது. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் பெருமையை மீட்டெடுக்கின்றனவா அல்லது வரலாற்றைத் திரிபுபடுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றனவா என்பதையும் ஆராய்கிறது.
ஹல்திகாட்டி போர்: ஒரு வரலாற்றுப் பார்வை Haldikatti Inscription History

1576ஆம் ஆண்டு, ஜூன் 18 அன்று நடந்த ஹல்திகாட்டி போர், மேவார் ஆட்சியாளரான மகாராணா பிரதாப்புக்கும் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய தளபதி ராஜா மான் சிங் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் இடையே நடந்த முக்கியமான மோதல். அபுல் ஃபசல் எழுதிய அக்பர்நாமா, அப்துல் காதிர் பதாயுனி எழுதிய முண்டகப்-உட்-தவாரிக் போன்ற முகலாய ஆதாரங்களிலிருந்து கிடைத்த வரலாற்றுப் பதிவுகள் போரின் விரிவான விளக்கத்தை வழங்குகின்றன.
கடும் சண்டைக்குப் பிறகு போர்க்களத்தில் முகலாயர்கள் கை ஓங்கி, அவர்கள் வெற்றியடைந்ததை இந்த ஆதாரங்கள் குறிக்கின்றன. படைபலம் குறைவாக இருந்த மகாராணா பிரதாப் களத்தில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து ஆரவல்லி மலைகளுக்குச் சென்று, அங்கு கெரில்லா போர் மூலம் தனது எதிர்ப்பைத் தொடர்ந்தார். முகலாயர்கள் போர்க்களத்தில் வெற்றி பெற்றபோதிலும் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தனர். பிரதாப்பைப் பிடிக்கவோ அல்லது மேவாரை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவோ தவறிவிட்டனர்.

அமர் காவ்யா, பிற்கால வாய்வழி மரபுகள் போன்ற ராஜபுத்திரக் குறிப்புகள், பிரதாப்பின் வீரம், தலைமைத்துவம், அவரது குதிரையான சேடக்கின் புகழ்பெற்ற சாகசங்களை வலியுறுத்தி மாறுபட்ட பார்வையை வழங்குகின்றன. இந்தப் பதிவுகள் போரில் பிரதாப் தார்மிக வெற்றி பெற்றதாகக் காட்டுகின்றன. முகலாய ஆட்சிக்கு அடிபணிய மறுத்த அவரது உறுதியைக் காட்டுகின்றன.
ஆர்.சி. மஜும்தார், ஜி.என். ஷர்மா, கே.எஸ். லால் போன்ற வரலாற்றாசிரியர்கள் முகலாயர்களின் வெற்றியை உறுதிப்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் பிரதாப் தந்திரோபாயமாகப் பின்வாங்கியதையும் அவர் ஓய்ந்துவிடாமல் அடுத்தடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஒப்புக்கொள்கிறார்கள். 1582ஆம் ஆண்டுக்குள் பிரதாப் மேவாரின் பெரும்பகுதியை மீண்டும் கைப்பற்றினார். போர்க்களத்தில் அவர் பெற்றது தீர்க்கமான தோல்வி அல்ல, ஒரு நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதி என்பதையே இது காட்டுகிறது. இந்த நுட்பமான முடிவு “வெற்றி” அல்லது “தோல்வி” என்ற முடிவுகளை மறுக்கிறது. மோதலின் சிக்கலான தன்மையைப் பிரதிபலிக்கிறது.
தியா குமாரியின் திருத்தம்: சூழலும் சர்ச்சையும் Haldikatti Inscription History

மகாராணா பிரதாப் “போரில் வென்றார்” என்று ஹல்திகாட்டி கல்வெட்டைத் தான் மாற்றியதாக தியா குமாரி கூறுவது, வரலாற்று நாயகர்களுக்கு ஆதரவாக வரலாற்று விவரங்களை மாற்றுவதற்கான முனைப்பைக் காட்டுகிறது. பிரதாப்பின் தோல்வியைக் குறிப்பிடும் அசல் கல்வெட்டு, ஆரம்பகால வரலாற்றுப் பதிவுகளில் ஆதிக்கம் செலுத்திய முகலாயப் பார்வையைப் பிரதிபலித்திருக்கலாம். இந்தியத் தொல்லியல் துறை (ASI) போன்ற நிறுவனங்களால் பராமரிக்கப்படும் இத்தகைய கல்வெட்டுகள், பொதுக் கல்விக்கு உண்மைத் தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குமாரியின் திருத்தம், ராஜபுத்திர மரபுகளையும், பல்வேறு தடைகளுக்கு எதிரான மன உறுதியின் வெற்றியாகப் பிரதாப்பின் எதிர்ப்பைக் கொண்டாடும் தேசியவாத உணர்வுகளையும் ஈர்க்கிறது.
இருப்பினும், இந்த மாற்றம் வரலாற்றுப் பதிவுகளில் இருக்க வேண்டிய நேர்மை குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பிரதாப்பை வெற்றியாளர் என்று அறிவிப்பது ஒரு சிக்கலான நிகழ்வை எளிமைப்படுத்துகிறது. சான்றுகளைக் காட்டிலும் கலாச்சார அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்தத் திருத்தம் பிரதாப்பை தேசிய அடையாளமாகப் பார்ப்பவர்களுக்கு உவப்பாக இருக்கும் அதே வேளையில், வரலாற்றுத் தளங்களில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடக்கூடிய அபாயத்தை உருவாக்குகிறது. Haldikatti Inscription History

பிரதாப்பின் வெற்றியை ஆதரிக்கப் புதிய முதன்மை ஆதாரங்கள் அல்லது தொல்லியல் சான்றுகள் இல்லாதது, இந்தக் கூற்றை மேலும் சிக்கலாக்குகிறது. இதுபோன்ற மாற்றங்கள் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அல்லாமல் சித்தாந்த அல்லது அரசியல் நோக்கங்களால் தூண்டப்படலாம் என்பதைக் காட்டுகிறது.
சமூக நினைவுகளை வடிவமைக்கும் கல்வெட்டுகள்
ஹல்திகாட்டி போன்ற தளங்களில் உள்ள வரலாற்றுக் கல்வெட்டுகள் வெறும் குறிப்பான்கள் அல்ல; அவை கடந்த காலத்தைப் பற்றிய பொதுப் புரிதலை வடிவமைக்கும் கருவிகள். அசல் கல்வெட்டு, முகலாய வெற்றியை வலியுறுத்துவதன் மூலம் பிரதாப்பின் எதிர்ப்பை மகத்தான வீரச் செயலாகக் கருதும் ராஜபுத்திரப் பார்வையைப் புறக்கணித்திருக்கலாம்.
தியா குமாரியின் திருத்தம், முகலாய அல்லது காலனித்துவப் பதிவுகளால் பாதிக்கப்பட்டு, வரலாற்று விளக்கங்களில் காலனித்துவ நீக்கம் செய்யும் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. திருத்தப்பட்ட கல்வெட்டு பிரதாப்பின் மரியாதையை மீட்டெடுக்கிறது, வரலாற்றில் பதிந்துள்ள பிழையைச் சரிசெய்கிறது என்று சிலர் வாதிடலாம்.

இருப்பினும், கல்வெட்டுகள் வரலாற்று ஆதாரத்தின் வலிமையைக் கொண்டுள்ளன. வலுவான ஆதாரங்கள் இல்லாமல் அவற்றை மாற்றுவது வரலாற்று விவரங்கள் மீதான பொது நம்பிக்கையைக் குலைத்துவிடும். 2021ஆம் ஆண்டு திருத்தம், சிவாஜி போன்ற வரலாற்று நாயகர்கள் குறித்த விவாதங்கள் அல்லது நகரங்களின் பெயர் மாற்றம் போன்ற இந்தியாவின் பூர்வீகப் பெருமையை வலியுறுத்தும் வகையில் வரலாற்றை மாற்றுவதற்கான போக்கைப் பிரதிபலிக்கிறது.
கலாச்சாரப் பெருமையும் வரலாற்றுத் துல்லியமும்
மகாராணா பிரதாப்பின் பாரம்பரியம், பெரும் தடைகளை மீறிப் போரிடும் துணிச்சலின் அடையாளம் என்ற வகையில், ராஜபுத்திர, இந்திய அடையாளத்தின் மையம். ஹல்திகாட்டி போரில் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், அக்பருக்கு அடிபணிய மறுத்த அவரது நிலைப்பாடு, தொடர்ந்து போராடி மீண்டுவருவதற்கான ஊக்கத்தை அளிக்கக்கூடியது. கல்வெட்டைத் திருத்தியது தனது “மிகப்பெரிய சாதனை” என்று தியா குமாரி கூறியது, வரலாற்றுப் பதிவுகளைத் திருத்துவது கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.
சமூக ஊடகங்களில் சிலர் இந்தத் திருத்தத்தை ராஜபுத்திரப் பெருமையை மீட்டெடுப்பதாகவும் வெளிநாட்டு சக்திகளால் திணிக்கப்பட்ட தகவல்களுக்கு எதிரான ஒரு எதிர்வினையாகவும் பாராட்டுவது இந்த உணர்வை எதிரொலிக்கிறது. Haldikatti Inscription History

இருப்பினும், வரலாற்று ரீதியான துல்லியத்திற்கு ஆதாரங்கள் தேவை. முகலாய அரசவைப் பதிவுகள், அந்தக் காலத்தின் பிற பதிவுகள் உட்படப் பல முதன்மை ஆதாரங்கள் ஹல்திகாட்டி போரில் முகலாயர்களின் கை ஓங்கியதைக் காட்டுகின்றன. பிரதாப்பின் வெற்றி குறித்த கூற்றுகளோ பிற்கால விளக்கங்களையும் வாய்வழி மரபுகளையும் சார்ந்துள்ளன. பிரதாப்பை வெற்றியாளர் என்று அறிவிப்பதன் மூலம் தேசியப் பெருமையைத் தூண்டலாம்; ஆனால் வரலாற்றுப் பதிவை சிதைக்கும் அபாயத்தை அது உருவாக்குகிறது.
இந்தப் பதற்றம் சமகால கதையாடல்களுக்கு இணங்க வரலாற்றை மீண்டும் எழுதாமல் கலாச்சார நாயகர்களை எவ்வாறு கௌரவிப்பது என்னும் சவாலை எடுத்துக்காட்டுகிறது. போரின் விளைவுகள் அந்தச் சூழல் சார்ந்தவை எனக் கருதி, முகலாயர்களின் வெற்றி, பிரதாப்பின் நீடித்த எதிர்ப்பு ஆகிய இரண்டையும் அங்கீகரிக்கலாம்.
அரசியல் களத்தில் வரலாறு என்னும் ஆயுதம் Haldikatti Inscription History
அரசியல் பிரமுகராகவும் ராஜா மான் சிங்கின் வம்சாவளியாகவும் விளங்கும் தியா குமாரி கல்வெட்டைத் திருத்துவதில் வகித்த பங்கு சிக்கலான அடுக்குகளைக் கொண்டுள்ளது. தனது மூதாதையரின் வெற்றியுடன் தொடர்புடைய ஒரு கதையாடலை அவர் மாற்றியிருப்பது நகைமுரண் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர். இந்த நடவடிக்கை நவீன தேசியவாத உணர்வுகளுக்கு இணக்கமான செயல் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ராஜஸ்தானில் ராஜபுத்திர அடையாளம் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதால், இந்தத் திருத்தம் பிராந்தியப் பெருமையின் காவலராக குமாரியின் பிம்பத்தை வலுப்படுத்தலாம். இது அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றுத் திருத்தங்களைப் பயன்படுத்துவது குறித்த நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. பொது நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளை கவனமாகச் செய்ய வேண்டும், தேர்தல் அல்லது கலாச்சார ஆதாயத்திற்காக வரலாற்றைத் திரிபுபடுத்துவதாக குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த திருத்தம் இந்திய அரசியலில் ஒரு பரந்த போக்கையும் பிரதிபலிக்கிறது. சமகாலச் சித்தாந்தங்களுடன் வரலாற்று விவரங்கள் ஒத்துப்போக வேண்டும் என்னும் அணுகுமுறை தற்போது நிலவுகிறது. பாடநூல் திருத்தங்கள் முதல் நினைவுச்சின்னங்களின் பெயர் மாற்றங்கள் வரை, இந்த முயற்சிகள் பெரும்பாலும் சமூகத்தின் பொது நினைவகத்தை தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவு பெறலாம் என்றாலும், அவை ஒரு கதையாடலுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றன. மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட சமூகங்களை அந்நியப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இதில் உள்ளன.
வரலாற்று விவாதமும் பொதுக் கல்வியும் Haldikatti Inscription History

ஹல்திகாட்டி கல்வெட்டைத் திருத்தியது அடிப்படையான கேள்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: வரலாற்றைக் கட்டுப்படுத்துவது யார்? கல்வெட்டுகள், பாடப்புத்தகங்கள், பொது நினைவுச்சின்னங்கள் ஆகியவை மாறுபட்ட கதையாடல்களுக்கான போர்க்களங்களாக உள்ளன. ஒவ்வொரு தரப்பும் சமூகத்தின் கூட்டு நினைவகத்தை வடிவமைக்கப் போட்டியிடுகின்றன. தியா குமாரியின் நடவடிக்கைகள் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யும் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், அவை ஒரு கண்ணோட்டத்திற்கு மற்றொன்றை விட முன்னுரிமை அளிப்பதன் மூலம் உரையாடலைப் பிளவுபடுத்தும் அபாயத்தையும் உருவாக்குகின்றன.
ஒரு சீரான அணுகுமுறை, முகலாயர்களின் வெற்றி, பிரதாப்பின் நீடித்த எதிர்ப்பு ஆகிய இரண்டையும் அங்கீகரிக்கும். இது கலாச்சார முக்கியத்துவத்தை மதிக்கும் அதே நேரத்தில் சான்றுகளை மதிக்கும் நுட்பமான கதையாடலையும் முன்வைக்கும்.
வரலாற்று முடிவுகளை மாற்றாமல் பிரதாப்பைக் கொண்டாட முடியும். உதாரணமாக, ஹல்திகாட்டி கல்வெட்டில் போரின் இரட்டை விவரங்களைச் சேர்க்கலாம். அதாவது, ராணா பிரதாப்புக்குக் களத்தில் ஏற்பட்ட பின்னடைவு, தொடர்ந்து போராடியதன் மூலம் அவருக்குக் கிடைத்த தார்மீக வெற்றி ஆகிய இரண்டையும் விளக்கக் கூடுதல் பலகைகளைச் சேர்ப்பது வரலாற்று நிகழ்வின் சிக்கலான தன்மையைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கும். பொது விவாதங்கள், கல்வித் திட்டங்கள் அல்லது டிஜிட்டல் ஆவணக் காப்பகங்கள் பிரதாப்பின் பாரம்பரியத்தை ஆராய்வதற்கு மேலும் ஊக்கமளிக்கலாம். பிடிவாதமான கூற்றுக்களைத் தவிர்த்துவிட்டு, விமர்சனபூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கலாம். இத்தகைய முயற்சிகள் வரலாறு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது என்பதை உறுதி செய்யும்; மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்கும்.
வரலாற்றைத் திருத்தாமலேயே நாயகர்களைக் கௌரவித்தல்

ஹல்திகாட்டி கல்வெட்டை தியா குமாரி திருத்தியது, மகாராணா பிரதாப்பின் பாரம்பரியத்தைக் கௌரவிப்பதற்கும் கலாச்சாரப் பெருமையை மீட்டெடுப்பதற்குமான நோக்கம் கொண்ட முயற்சியைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், முகலாயர்களின் பதிவுகள், நவீன அறிஞர்களின் ஆய்வுகள் ஆகியவை முகலாயர்கள் ஹல்திகாட்டி போரில் வென்றனர் என்பதைக் காட்டுகின்றன. பிரதாப்பின் பின்வாங்கல் தொடர்ந்து போரிடுவதற்கான சாத்தியத்தை உருவாக்கியது.
திருத்தப்பட்ட கல்வெட்டு ஒற்றுமையையும் பெருமையையும் தூண்டலாம் என்றாலும், அது சான்றுகளைக் காட்டிலும் வாழ்மொழிக் கதைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வரலாற்றைத் திரிபுபடுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. வரலாற்றின் பாதுகாவலர்களாக, பொது நபர்கள் கலாச்சார மரியாதையைச் சான்றாதாரங்களுடன் வலுப்படுத்த முயல வேண்டும்.
ஹல்திகாட்டியில் முகலாயர்களின் கை ஓங்கியது, பிரதாப்பின் வீரப் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் அங்கீகரிக்கும் ஒரு கல்வெட்டை அமைக்கலாம். இந்தியாவின் சிக்கலான கடந்த காலத்தைப் பற்றிய செழுமையான புரிதலை இது வளர்க்கும். பெருமை, உண்மை இரண்டையும் தழுவுவதன் மூலம், வரலாற்று உண்மைகளைச் சமரசம் செய்யாமல் பிரதாப் போன்ற நாயகர்களை நாம் கௌரவிக்க முடியும். Haldikatti Inscription History
ஹஸ்னைன் நக்வி மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர்
நன்றி: தி வயர் இணைய இதழ் Haldikatti Inscription History