ADVERTISEMENT

செப் 28ல் குரூப் 2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுரை!

Published On:

| By Kavi

வரும் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு நடத்தும் குரூப் 2 தேர்வை 5,53,634 எழுதவுள்ளனர்.

ADVERTISEMENT

தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி இன்று (செப்டம்பர் 26) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்- 2 மற்றும் குரூப்-2ஏ-ல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு நாளை மறுநாள் (28.09.2025) அன்று முற்பகல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213) தேர்வர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.

இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1,905 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது நாளை மறுநாள் (28.09.2025) முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share