”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கைவிடுவதாகவும் அமெரிக்கா பொருட்களையே வாங்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் பிரதமர் மோடியுடன் பேசியது பெருமிதம் தருகிறது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர். மோடி, அவரது நாட்டின் சக்திவாய்ந்த, மரியாதைக்குரியத் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி ஒப்புக் கொண்டார். மேலும் அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கவும் மோடி ஒப்புக்கொண்டார். இது தற்போது நடந்து வரும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையினால், மற்றும் அவரது வேண்டுகோளின்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம், இதன் மூலம் அமெரிக்கா Reciprocal Tariff-ஐ 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கும். அதேபோல் அமெரிக்காவுக்கு எதிரான வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை ஜீரோவாகக் குறைக்க இந்தியாவும் நடவடிக்கை எடுக்கும்.
மேலும், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பிற பொருட்களை வாங்குவதோடு, ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம்’ என்ற கொள்கையை கடைபிடிக்கவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்
இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
140 கோடி இந்தியர்களின் நன்றி- மோடி
பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அன்பிற்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்புடன் இன்று பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. “Made In India” தயாரிப்புகளுக்கு வரி 25%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்படும் என டிரம்ப் கூறியது மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்காக, 140 கோடி இந்திய மக்கள் சார்பாக டிரம்ப்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு பெரிய பொருளாதார நாடுகளும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, பரஸ்பர நன்மை தரும்.
உலகளாவிய அமைதி, அரசியல் நிலைத்தன்மைக்கு டிரம்ப் தலைமை மிக முக்கியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது.
அவருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
