தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத்துணிகள் என்பதை தாண்டி பலவகையான பலகாரங்களும் முக்கிய இடம்பெறும். ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகள் வரை தீபாவளி பலாகர விற்பனை கோடிக்கணக்கில் வியாபாரம் ஆவது உண்டு.
அதன்படி இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பலகார விற்பனைகளுக்கான தயாரிப்பு பணிகளும் சூடுபிடித்துள்ளன.
இந்த நிலையில் பண்டிகை கால இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் உணவு பாதுகாப்பு துறை தரப்பில் இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்டுள்ளது.
1. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி குற்றமாகும். மேலும் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 63-ன் படி ரூ. 10 லட்சம் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிகக வாய்ப்பு உள்ளது.
3. பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும் தனித்தனியே பொட்டலமிடுதல் வேண்டும்.
4. உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய் / நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. உணவு மூலப்பொருட்களை பலகையின் மீது மூடிய நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
6. பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
7. Gift Box களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலர்ந்த பழங்கள், கொட்டைகள் (Nuts) போன்ற பொட்டலங்கள் கண்டிப்பாக லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
8. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
9. உணவு கையாளபவர்கள் வெற்றிலை புகையிலை மெல்லுதல், புகை பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிக்கும் வளாகத்தில் அனுமதிக்க கூடாது. பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
10. உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் பயிற்சி பெற்ற பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.