சென்னையில் கட்டணமில்லா குடிநீர் இயந்திரங்கள் திறப்பு!

Published On:

| By Kavi

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது. Free drinking water machines

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (Water Dispensing Unit) நிறுவி பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களான பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், வணிக பகுதிகள், இரயில் நிலையங்கள், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை என 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் 6.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 18) திறந்து வைத்து குடிநீரை அருந்தினார்.

இந்த திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ குடிநீர் விநியோக குழாயிலிருந்து 3,000 லிட்டர் முதல் 9,000 லிட்டர் கொள்ளளவுள்ள கொண்ட HDPE சின்டெக்ஸ் டேங்குகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும் புறஊதாக் கதிர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு துருப்பிடிக்காத சில்வர் டேங்குகளில் சேகரிக்கப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் 1 லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன IoT (Internet of Things) மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறையை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் குடிநீர் அளவு குறையும் போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தபடுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Free drinking water machines

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share