வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றவாளி என டாக்கா சிறப்பு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. பிரதமர் வீடு, முக்கிய அரசு அதிகாரிகளின் வீடு சூறையாடப்பட்டது.
இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்க தேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்பட பல வழக்குகளை பதிவு செய்யப்பட்டது. அதாவது, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களை ஷேக் ஹசீனா ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சுட்டுக்கொள்ள உத்தரவிட்டதாகவும், வன்முறையை தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இன்று (நவம்பர் 17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போராட்டங்களின் போது 1,500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் கொடூர வன்முறைக்கு ஷேக் ஹசீனாவே பொறுப்பு என தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டுள்ளார் என்று கூறி அவருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசினா தற்போது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
