தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விஜய் கூட்டத்திற்கு வந்த கட்சியினர் மொத்தம் 5 பேர் வெவ்வேறு இடங்களில் வாகன விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று (மார்ச் 4) வருகை தந்தார். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்தவுடன், நுழைவாயிலில் இருந்த தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சில தொண்டர்கள் கீழே விழுந்தனர். இதில் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களும் கீழே விழுந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை மீட்டு அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்த ஆதரவாளர்களின் வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகின. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். விஜய் வாகனத்தைத் துரத்தி வந்த இளைஞர்களான அருண், விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் வேலூரில் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இன்று தஞ்சாவூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது வருந்தத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
