அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 7-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இன்று (ஜூன் 27) அறிவிக்கப்பட்டுள்ளது. eps starting his election tour in july 7th
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையொட்டி, “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7-ந் தேதி, முதல் கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
ஜூலை 7-ந் தேதி கோவையில் தொடங்கும் இந்த பயணம் ஜூலை 21-ந் தேதி பட்டுக்கோட்டை பேராவூரணியில் நிறைவடைகிறது.
இதுதொடர்பாக அதிமுக தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக, ‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’ என்ற பெயரில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்த எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்’ போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.