தமிழக சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 17) 2026 -27 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மேலும் தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மக்களுக்கு அரசு எப்படி காது குத்தி உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். கடந்த 2021 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு பங்கு கூட நிறைவேற்றப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளைப் போலவே, இந்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையும் வார்த்தைகள் ஜாலம் நிறைந்த உரையாகத்தான் உள்ளது. உருப்படியாக பட்ஜெட்டில் எதுவும் இல்லை.
அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும்; உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். அதற்கு உதாரணம்தான் இந்த நிதிநிலை அறிக்கை. வரவு-செலவுத் திட்டம் குறித்து உருப்படியாக எதுவும் இல்லை.
நிதி நிலைமையை சரி செய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் கடன் அதிகரித்துள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.26,000 கோடி குறைந்துள்ளது.
மத்திய அரசு குற்றம் சாட்டிய, நிதி அமைச்சர் மாநில அரசின் வருவாய் குறித்து பேசவில்லை. வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டை போட்டுள்ளார்கள்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
